இதில் ஒரு வாலிபர் அங்குத் தடுக்கி விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். ஆனால் மற்றொரு வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபரைப் பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
கோவை: கோவை நெகமம் அடுத்த பணப்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில், சந்தன மரத்தை வெட்டி வாலிபர்கள் தப்பி ஓடினர்.
கோவை நெகமம் அடுத்த பணப்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது. அங்குச் சந்தன மரம் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை அந்த தோட்டத்தில் 2 வாலிபர்கள் அங்கு ஒரு சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பால்காரர் ஒருவர் தோட்டத்தில் 2 பேர் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே சத்தம் போட்டார். அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தனர்.
இதில் ஒரு வாலிபர் அங்குத் தடுக்கி விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். ஆனால் மற்றொரு வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபரைப் பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து காயமடைந்த அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டுக்கலை சேர்ந்த முத்துக்குமார் (வயது 20) என்பதும் அவர் கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரைக் கைது செய்தனர். தப்பிச் ஓடிய மற்றொரு வாலிபர் அவரது நண்பர் சிவா மகுடபதியை போலீசார் தேடி வருகின்றனர்.