இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமரை கண்டிப்பதாகவும், தமிழகத்தில் அணிவகுப்பு நடத்திய முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
கோவை: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசு தின விழாவான இன்று டெல்லியில் நடைபெறும் மாநில ஊர்திகள் அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திகளுக்கு சில காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, குடியரசு தினமான இன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கோவையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் கோவை மாவட்ட திராவிட இயக்க தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விடுதலை வீரர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமரை கண்டிப்பதாகவும், டெல்லியில் மறுக்கப்பட்ட ஊர்தியை தமிழகத்தில் அணிவகுப்பு நடத்திய முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம் உட்பட பல அமைப்பினர் கலந்து கொண்டனர்.