கொடி ஏற்றுவதற்கு முன்னதாக மாநகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி சிலைக்கு அணிவகுப்பு நடத்தி மாலை அணிவித்தார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கி ஆணையர் கௌரவித்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் இன்று 73வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சி ஆணையர், ராஜகோபால் சுங்கரா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, மாநகராட்சி அலுவலகத்திலுள்ள தேசத்தந்தை, காந்தி அடிகளாரின் சிலைக்கு அணிவகுப்பு நடத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கார சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கி கௌரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர், "கோவை மாநகராட்சியில் 2வது முறை தேசிய கொடி ஏற்ற வாய்ப்பு கிடைத்தது மிக நெகிழ்ச்சியானது ஆகும். கோவைக்கு தனி சிறப்பும், வரலாறும் உள்ளது. பெருமைமிக்க, கோவை மாநகராட்சியில், பணியாற்றுவதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். இந்தியாவின் சிறந்த நகரமாக, நற்பெயருடன் கோவை விளங்க வேண்டும் என்பதே என் ஆசை.
தற்போது, நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால், நாம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதியாக பணியாற்றும் நாம் அனைவரும், சிறப்பாக மக்கள் சேவை ஆற்ற வேண்டும்", என்றார்.
விழாவில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா, மாநகராட்சியின் அனைத்து துறையின் தலைமை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.