கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தால் ஏழை மக்களின் ஜவுளிப் பொருட்கள் விலை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜவுளி தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கோவை: கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தால் ஏழை மக்களின் ஜவுளிப் பொருட்கள்விலை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜவுளி தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
• கூலி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உள்ளதாக தொழில்துறையினர் தகவல்
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையேஏற்பட்டுள்ள பிரச்சினையால், ஏழை மக்கள் பயன்படுத்தும் ஜவுளி பொருட்கள், படுக்கை விரிப்புகள், பெண்கள் பயன்படுத்தும் நைட்டி என்பது உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜவுளி தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் சங்கத்தின் (OSMA) நிர்வாகி, அருள்மொழி கூறியதாவது:
தேசியளவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு அதாவது 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவழங்கும் துறையாக ஜவுளித் தொழிலில் உள்ளது. குறிப்பாகக் கிராமப்புற பெண்கள் பலர் இத்துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவின் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 38 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் (GDP) 4.3 சதவீதம் ஜவுளி தொழில் கொண்டுள்ளது.
இதன் காரணமாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இரண்டு வகையான சங்கங்கள் உள்ளன. ஒன்று கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றொன்று ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் நூலை நேரடியாகக் கொள்முதல் செய்ய மாட்டார்கள்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் நூலைக் கொள்முதல் செய்து விசைத்தறி உரிமையாளர்களிடம் துணி செய்வதற்கான ஆர்டர் வழங்குவார்கள். அதற்குக் கூலி வழங்கப்படும். இவ்விருசங்கங்களுக்கும் இடையே கூலி ஒப்பந்தம் செய்வது தொடர்பாக அவ்வப்போது பிரச்சினை ஏற்படும். பேச்சுவார்த்தைக்குப் பின் தீர்வு காணப்படும்.
தற்போது கூலி உயர்வு தொடர்பாக விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 20 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அடிக்கடி இதுபோன்ற கூலி உயர்வு பிரச்சனை ஏற்படுவதால் கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள்Sulzer Jetஎன்று சொல்லக்கூடிய அதிநவீன விசைத்தறி இயந்திரங்களை நிறுவி காடா துணி உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளனர்.
மார்க்கெட்டில் தற்பொழுது பஞ்சு விலை மற்றும் நூல் விலை உயர்ந்துள்ளதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களிடம் துணி செய்வதற்கு வழங்கும் கூலி கட்டுபடி ஆகாத காரணத்தால், அதிகக் கூலி கொடுப்பதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
பெரும்பாலும் ஏழை மக்கள் பயன்படுத்தும் ஜவுளி பொருட்கள், பெண்கள் பயன்படுத்தும் நைட்டி, படுக்கை விரிப்புகள் என்பது உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தான் இத்தகைய துணிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
தற்போது இரண்டு சங்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைதொடரும் காரணத்தால் ஏழை மக்கள் பயன்படுத்தும் ஜவுளி பொருட்களின் விலை வரும் நாட்களில் பல மடங்கு அதிகரிக்கும். ஏற்கனவே கொரோனா நோய்த் தொற்று மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாகஏழை மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் பயன்படுத்தும் ஜவுளி பொருட்கள் விலையும் உயர்ந்தால் அதனால் அவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.
இது மட்டுமல்ல விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் தயாரிக்கப்படும் நூல் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தேங்கியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நூல் விலை குறைந்தால் தற்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பஞ்சின் விலையோடு ஒப்பிடும்போது ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விசைத்தறி கூடங்களில் 80% ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் தயாரிக்கப்படும் நூல் தான் பயன்படுத்தப்படுகின்றன.
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தால், நாளுக்குநாள் நிலைமை மோசமாகி வருகிறது. விசை தறிகளில் காடா துணி உற்பத்தி செய்ய warp/weft என இரு வகையான OE நூல்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் warp நூல்கள் இந்தியாவின் அனைத்து மாநில OE மில்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆனால் OE weft நூல் தமிழ் நாடு OE மில் கள் மட்டுமே தயார் செய்கின்றன. தற்போது விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக oe weft நூல் தயாரிக்கும் மில்கா அனைத்தும் viscose cotton polyster white vleach colour yarn உற்பத்திக்கு மாறிக் கொண்டு உள்ளார்கள். எனவே இந்த நிலைமை நீடித்தால் வரும் காலத்தில் விசைத்தரிகளுக்குத் தேவையான oe weft நூல் கிடைப்பது கேள்விக்குறியாகும்.
தமிழக அரசு இப்பிரச்சினையைக் கருத்தில் கொண்டு கூலி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• கூலி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உண்டு!
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காடா துணிகள் வடமாநிலங்களுக்குச் சாயம் ஏற்றி, பதப்படுத்தக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அங்கிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டு பல்வேறு ஜவுளி பொருட்களாகத் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடல் நீர் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் தென்னிந்திய மில்கள் சங்கம்(SIMA) மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகள் கூட்டாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக கடலூரில் ஜவுளி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதை விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தற்பொழுது வடமாநிலங்களுக்குப் பதப்படுத்த அனுப்பப்படும் போக்குவரத்து செலவு கணிசமாகக் குறையும். இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு இடையே கூலி தொடர்பான பிரச்சினையை எதிர்வரும் காலங்களில் ஏற்படாத நிலை உருவாகும்.
இவ்வாறு அருள்மொழி கூறினார்.