கோவையில் 21-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அரசின் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளவர்.
கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைக்கப்பட்ட மைதானத்தில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சமீரின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்காக வழிகாட்டு நெறிகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவையில் 21-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அரசின் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளவர்.
போட்டியில் பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. ஊடகங்கள் வாயிலாக நேரலையில் போட்டியை கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மட்டுமே அரசால் வழங்கப்பட்டுள்ளது.
சேவல்கட்டு, ரேக்ளா போன்ற மற்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அரசாணையில், எந்தவித அறிவிப்பும் வழங்கப்படவில்லை. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றுடன், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
மாடுகளுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே இருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பதிவு செய்த மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கோவை காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், போட்டி நடைபெறும் நாளன்று மைதானத்தில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் வந்தால் அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு 2000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.