கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற உலகத் திருக்குறள் மாநாட்டை, தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி, "கல்வெட்டில் திருக்குறள் 6" என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார்.
கோவை: கோவையில் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி, "கல்வெட்டில் திருக்குறள் 6" என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார்.
கோவை தனியார் கல்லூரி மற்றும் குறள் மலைச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில், தமிழக ஆளுநர் 10 மாணவர்களுக்கு சிறந்த தமிழ் மாணாக்கர் என்ற சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மேலுல் குறள் மலை "பெருநீதிப் பெருமகனார்" விருதை சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன்க்கும், குறள் மலை "வாழ்நாள் சாதனையாளர்" விருதை கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் நல்லா.ஜி.பழனிசாமி க்கும், குறள்மலை "மனுநீதிச் சோழன்" விருதை, கோவை மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மனுநீதி மாணிக்கம் என்பவருக்கும், குறள்மலை "சிறந்தகல்வியாளர்" விருதை கோவை, எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் மணிமேகலை மோகன் ஆகியோருக்கும் வழங்கினார்.
விழாவில், சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ,"நமது தேசம் புண்ணிய பூமி. சான்றோர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், வாழ்ந்த நாடு. திருக்குறளில் எவ்வாறு முறையாக வாழ்வது என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. திருக்குறளின் மகிமை பாதுகாக்க வேண்டும். நாம் நல்ல மனிதராக வாழ திருக்குறளினை தினமும் படித்து, அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அமைதியான வாழ்க்கையை நடத்த திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வரியும் பல நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு குறளிலும் உள்ள ஏழு வார்த்தைகளையும் உண்மையாக புரிந்து படித்தால், வாழ்க்கையில் எல்லோரும் போற்றும் நிலையை அடைய முடியும். திருக்குறள் நமது வாழ்க்கையை உயர்த்தும் ஏணியாக உள்ளது. வாழ்க்கையில் முன்னேற நல்ல செயல்களை பின்பற்றுங்கள். திருக்குறள் உலகிற்கு ஒரு உதாரணமாக உள்ளது, என்று கூறினார்.
மேலும், இம்மாநாட்டில் 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும், மலையிலே கல்வெட்டில் பதிக்கப்படும், திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் மற்றும் உலக நூலாக அறிவிக்கப்பட இருக்கும் திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பாடத்திட்டமாக சேர்க்க ஆவண செய்யவேண்டும் போன்ற மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில், தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், கவிஞர் கவிதாசன், திருப்பூர் முத்தமிழ்சங்கத்தின் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி, கே.சுந்தரராமன் உட்பட பலர் கலந்து கொண்டு திருக்குறளின் மேன்மையினைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் பேசினர்.