முழு ஊரடங்கு எதிர்கொள்ளும் நிலைமையில் தொழிலாளர்களும் இல்லை, உரிமையாளர்களும் இல்லை எனவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்க தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: முழு ஊரடங்கு எதிர்கொள்ளும் நிலைமையில் தொழிலாளர்களும் இல்லை, உரிமையாளர்களும் இல்லை எனவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்க தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் கடந்த காலங்களைப் போல் முழு ஊரடங்கு அமல்படுத்துவதைத் தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்றும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், கோவை தொழில்துறையினர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(SIEMA)தலைவர் கே.வி. கார்த்திக் கூறியதாவது:-
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கம் மற்றும் மூலப்பொருட்களின் அபரிமிதமான விலை ஏற்றம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்கனவே தொழில்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை தமிழகத்தில் துவங்கியுள்ளது.
இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை முழுமனதோடு வரவேற்கிறோம். எதிர்வரும் நாட்களில் தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளில் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கும் சூழல் ஏற்படும்.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் உற்பத்திப் பிரிவின் கீழ் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு ஊரடங்கு எதிர்கொள்ளும் நிலைமையில் தொழிலாளர்களும் இல்லை தொழில் நிறுவன உரிமையாளர்களும் இல்லை. நிலைமை அந்த அளவுக்கு மோசமான சூழலில் உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.
கொங்கு குளோபல் போரம்(KGF) கூட்டமைப்பின் இயக்குனர், டி. நந்தகுமார் கூறியதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்படும் அபாயங்கள் குறித்து மக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளில் தவித்துக் கொண்டு உள்ள காரணத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்துவதை எதிர்வரும் நாட்களிலும் தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.
தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைச் சீரான முறையில் பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின்(COSMAFAN)தலைவர், சிவசண்முககுமார் கூறியதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பரவல் இரண்டு அலை ஏற்படுத்திய தாக்கம் காரணமாகப் பொருட்கள் வாங்குவது மக்கள் மத்தியில் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது அலை பரவி வருவது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முழு ஊரடங்கு அமல்படுத்தினால் ஒட்டுமொத்த சங்கிலித் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மக்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். தற்போது பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே எதிர்வரும் நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதைத் தமிழக அரசு தவிர்க்க வேண்டும். எத்தகைய கட்டுப்பாடுகள் அமல் படுத்தினாலும் தொழில் நிறுவனங்களுக்கு அவற்றிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின்(COTMA) தலைவர், சிவக்குமார் கூறியதாவது:-
தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி விட்டனர். தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தினாலும் அதில் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது கடந்த காலங்களைப் போலத் தொடர வேண்டும். அ
ரசு தெரிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தொழிலாளர்கள் அனைவரும் உரிய முறையில் பின்பற்றுவதைத் தொழில் நிறுவன உரிமையாளர்கள் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள். இரவு நேரங்களில் பணிக்கு வரும் தொழிலாளர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வருவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அரசுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை 'சிட்கோ' தொழிற்பேட்டை உரிமையாளர்கள் நல சங்கத்தின்(COSIEMA) தலைவர், நல்லதம்பி கூறியதாவது:-

அலுமினியம், ஸ்டீல், காப்பர் என்பது உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் அனைத்துவித மூலப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் 3 அலை பரவல் தொழில் துறையினருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழில் நிறுவனங்களும் தொடர்ந்து செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைச் சரிவரப் பின்பற்றப்படுவதைத் தொழில் நிறுவன உரிமையாளர்கள் உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.