கடந்த இரண்டு மாதங்களாக இந்திய பருத்தியின் விலை சர்வதேச பருத்தியின் விலையை விட கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உள்ளது.
கோவை: பருத்தியின் மீதான இறக்குமதி வரியை உடனடியாக நீக்காவிட்டால் பருத்தியைச் சார்ந்த ஒட்டுமொத்த ஜவுளித்துறையின் இயக்கம் வரும் மாதங்களில் நின்றுவிடும் என்று சைமா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு உற்பத்தி துறைகளின் உலகளாவிய துறைகளின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் வண்ணம் வரிகள், மூலப்பொருட்கள், ஏற்றுமதி பொருட்களுக்கு வெளிநாடுகளில் விதிக்கப்படும் இறக்குமதி வரி போன்ற சிக்கல்களை தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
105 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இந்திய ஜவுளித்துறை அதிலும் குறிப்பாக கிராமப்புற பெண்கள் மிகவும் பயன் அடைந்துள்ளனர். ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள ஒட்டுமொத்த ஜவுளிப் பொருட்களையும் ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வந்தும் பாலியஸ்டர் மூலப் பொருட்கள் மற்றும் பாலியஸ்டர் / அகரிலிக், விஸ்கோஸ் பஞ்சு மீதும் குவிப்பு வரியை நீக்கியும் அரசு தைரியமான முடிவை எடுத்தது.
மேலும், ஏற்றுமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகளை திரும்ப பெறும் வண்ணம் RoDTEP என்ற திட்டத்தை அறிவித்ததன் மூலம் உலகளவில் நமது ஜவுளித் தொழிலின் போட்டி ஸ்திரனை அதிகரிக்க உதவியது.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் (2021-22) பருத்தி சதவீத இறக்குமதி வரியை அமலுக்கு கொண்டு வந்தது மட்டுமே ஒரு எதிர்மறை நடவடிக்கையாக அமைந்தது. ஆகையினால், உடனடியாக ஜவுளித் துறையினர் மேற்படி வரியை நீக்குமாறு வேண்டிக் கொண்டனர்.
ஏனெனில் வெறும் 4 முதல் 5 சதவீதம் பருத்தியே இறக்குமதி செய்யப்படுவதால் அது எந்தவிதத்திலும் இந்திய விவசாயிகளை பாதிக்காது. எப்போதாவது பற்றாகுறை ஏற்படும்பட்சத்தில் அல்லது உள்நாட்டு பருத்தி விலை சர்வதேச விலையை விட அதிகமாக இருக்கும் போது மட்டுமே ஜவுளித்துறையினர் பருத்தியை இறக்குமதி செய்கின்றனர். இதனால் தொழிலில் ஒரு சமதளம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. எனவே, பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி எவ்விதத்திலும் இந்திய பருத்தி விவசாயிகளை பாதிக்காது.
2021-22 பருத்தி சீசனில் 75 இலட்சம் பேல்களாக கையிருப்பாகவும், உத்தேச பருத்தி உற்பத்தி 360 இலட்சம் பேல்கள் என்று மதிப்பிட்ட போதும், பருத்தி சீசனின் ஆரம்பத்திலேயே சர்வதேச சந்தையில் முன் எப்போதும் காணப்படாத பருத்தி விலையின் நிலையற்ற தன்மையால் பருத்தி விலைகள் கடுமையாக உயர தொடங்கியது.
கொரோனா தாக்கத்தின் பிந்தைய காலத்தில் பருத்திக்கான தேவை அதிகமாக உயர்ந்தது. உலக பருத்தி உற்பத்தியில் 10 சதவீத பங்கு வகிக்கும் சீனாவின் ஜின்ஜியான் மாகாணத்தின் பருத்தி மற்றும் இதர பொருட்களின் மீதான அமெரிக்காவின் தடை நிலைமையை மோசமடைய செய்தன. இந்திய பொருட்களின் சந்தைகளான MCX மற்றும் NCDEX பெரும் வர்த்தகர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவது நிலைமையை சிக்கலாக்கியது.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம், இந்தியாவிலேயே விளைவிக்கப்படும் பருத்தியை அதன் சீசனில் (டிசம்பர் முதல் மார்ச் வரை) 5 முதல் 10 சதவீதம் மலிவாக கிடைப்பதால் ஜவுளித்துறையினர் உலகளவில் போட்டியிட உதவுகிறது.
ஆனால், தற்போது சீசன் துவக்கத்தில் இருந்தே பருத்தியின் விலை உயரத் துவங்கியதாக அவர் கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில் அக்டோபர் 1.2021 அன்று குவிண்டாலுக்கு ரூ.6788 ஆக இருந்த குஜராத் சங்கா -6 பருத்தியின் சராசரி விலை தற்போது ரூ.8930 ஆக உந்துள்ளது.
அதே சமயம், நல்ல தரமான சங்க பருத்தியின் விலை ரூ.7575 லிருந்து ரூ.10.760 ஆக அதிகரித்துள்ளது. பொதுவாகவே இந்திய பருத்தியின் விலையை விட சர்வதேச பருத்தியின் விலை அதிகமாகவே இருக்கும் என்றும் கடந்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பருத்தியின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியின் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய பருத்தியின் விலை சர்வதேச பருத்தியின் விலையை விட அதிகமாகி இந்திய ஜவுளித்துறையின் போட்டித்திறனை வெகுவாக பாதித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்திய பருத்தியின் விலை சர்வதேச பருத்தியின் விலையை விட கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
ரவி சாம் மேலும் தெரிவிக்கையில், பொதுவாக டிசம்பர் ஜனவரி மாதங்களில் உறுதியாக கூடிய ஏற்றுமதி ஆடர்களை தற்சமயம், இந்திய ஏற்றுமதியாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலை உள்ளதாலும், இதனால் அந்த ஆடர்கள் போட்டி நாடுகளுக்கு சென்றடைவதாகவும் தெரிவித்தார்.
சைமா தலைவர், விவசாயிகள் பருத்தியின் விலை மேலும் உயரும் என்று கருதுவதால், பருத்தியை சந்தைக்கு கொண்டு வருவதில்லை. இதனால், சந்தையில் தரமான பருத்தி கிடைப்பதில்லை எனவும், அவ்வாறு கிடைத்தால் அதற்கு 5 சதவீதம் முதல் 7 சதவீதம் பஞ்சாலைகள் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதால் அன்றாட தேவைக்கான பருத்தியை வாங்குவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது என்று கூறினார்.
பருத்தியின் மீதான இறக்குமதி வரியை உடனடியாக நீக்காவிட்டால் பருத்தியை சார்ந்த ஒட்டுமொத்த ஜவுளித்துறையின் இயக்கம் வரும் மாதங்களில் நின்றுவிடும் என்று தனது கவலையை தெரிவித்தார்.
MCX மற்றும் NCDEX போன்ற தளங்களில் பருத்தி வர்த்தகம் பன்னாட்டு பருத்தி வணிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்று தெரிவித்தார். ஆகவே, பாரத பிரதமர் அவர்கள் தலையிட்டு பருத்தி மற்றும் கழிவு பஞ்சு மீதான இறக்குமதி வரியை உடனடியாக நீக்கவும், MCX மற்றும் NCDEX போன்ற தளங்களில் சில விவசாய பொருட்களின் வர்த்தகத்தை சமீபத்தில் நீக்கியது போல், பருத்தி வர்த்தகத்தை நீக்கி ஊக வணிகத்தை தவிர்க்க வேண்டும் என்று சைமா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.