கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை தங்களுக்கு வழங்கப்படவில்லை என தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
கோவை: கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை தங்களுக்கு வழங்கப்படவில்லை என தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தினர், வைரஸ் தொற்று காலத்தில் மாநகராட்சியில் பணியாற்றிய முன் பணியாளர்களான மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட 15-ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, கிராமப்புறத்தில் பணியாற்றிய தூய்மை காவலர்கள் தூய்மை பணியாளர்கள் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்குக் கிடைக்கவில்லை எனவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முதல்வருக்குப் பரிந்துரைக்குமாறும் இச்சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து, இன்று தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நடத்தப்படுவதால் அரசின் மீது நம்பிக்கை வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்து கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொங்கலுக்கு முன்பு ஊக்கத்தொகையைத் தமிழக அரசு வழங்கி உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
மேலும், தங்களது கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உதவுமாறும் கேட்டுக் கொண்டுள்ள அவர்கள் இதனால் கிராமப் புறத்தில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெறுவர் எனவும் தெரிவித்தனர்.