கோவையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு பின்னணியை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில், 'சாகா' பயிற்சி அளிப்பது வன்முறையை தூண்டும் பயிற்சி என து.ராஜா விமர்சித்துள்ளார்.
கேரளா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் வரும் ஜனவரி 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா அக்கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எங்கள் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் வரும் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது. அகில இந்திய மாநாடு இந்தாண்டு அக்டோபர் மாதம் 14 முதல் 18 ம் தேதி வரை விஜயவாடாவில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் உள்ள அரசியல் சூழல், மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை மதிப்பீடு செய்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தற்போது மூர்க்கத்தனமாகச் செயல்பட தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மதவாத ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையாக இருப்பதால் அதனை நிறைவேற்ற மதம், சாதி, மொழி கலாச்சாரத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துகின்றனர். இதனை சாதிக்க பா.ஜ.கவை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்-ன் வழிகாட்டுதலின் பேரில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. கோவையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு பின்னணியை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில், தனியார் பள்ளியில் 'சாகா' பயிற்சி அளிக்கப்படுகிறது. இது வன்முறையை தூண்டும் பயிற்சி. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தகர்த்து வருகிறது.
பிரதமர் பின்பற்றும் கொள்கைகள் நமது பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கும் கொள்கையாக உள்ளது. பசி-பட்டினியில் உள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் இந்தியா உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேளாண் சட்ட பிரச்சினையில் பிரதமர் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கவில்லை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தான் மன்னிப்பு கேட்டார்.
வங்கிகளை தனியாரிடம் ஒப்படைப்போம் என்றனர், இதனால் வங்கி ஊழியர்களும் போராட்டம் நடத்தினர். உழைக்கும் மக்கள் நாட்டின் சுயசார்பை காப்பாற்ற போராடுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ள நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டாட்சி என்பதன் அரணாக உள்ள அவையே செயல்படாமல் உள்ளது. பாராளுமன்றம் முடக்கப்படுமானால் ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமரை வரவேற்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம். ஆனால் பிரதமர் வருகையால் அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை ஏற்கவில்லை. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு குறித்து ஏற்கனவே நாங்கள் பேசி உள்ளோம். இந்திய கம்யூனிஸ்ட், கட்சிதான் முதலில் வேண்டுகோள் விடுத்தது. கூட்டு முயற்சி எடுத்தால் தமிழகத்தில் வாக்கு வங்கி உயரும் என தெரிவித்தார்.