இது குறித்து தங்கலிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரணை செய்த போது, சொந்த பாதுகாப்பிற்காக வைத்திருப்பதாகவும், உடமைகளோடு துப்பாக்கி இருந்தது குறித்து தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
கோவை: கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த கேரள காங்கிரஸ் பிரமுகரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ தங்கல். 60 வயதான இவர், கேரள காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். பட்டாம்பி நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்நிலையில், தங்கல் கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல இருந்தார். இதற்காக பட்டாம்பியில் இருந்து தங்கல் காரில் கோவைக்கு வந்தார்.
கோவை விமான நிலையத்திற்கு தங்கல் வந்த போது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது அவரது கைப்பையில் ஒரு 22 எம்.எம். கைத் துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைத் துப்பாக்கி பயன்படுத்தும் நிலையில் இல்லாததும் தெரியவந்தது.
இது குறித்து தங்கலிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரணை செய்த போது, சொந்த பாதுகாப்பிற்காக வைத்திருப்பதாகவும், உடமைகளோடு துப்பாக்கி இருந்தது குறித்து தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
இருப்பினும் துப்பாக்கிக்கு உரிய ஆவணங்கள் தங்கலிடம் இல்லாததால் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை பீளமேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கலிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.