கோவை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்கள் 22,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டம்.
கோவை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. வரும் 3 ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றுபிரதமர் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 33 லட்சத்து 20 ஆயிரம் உள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3-ந் தேதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கே சென்று சிறுவர்களுக்கு நேரடியாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கோவை மாநகராட்சி பகுதியில் 15 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஜனவரி 10-ம் தேதி முதல் கோவையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும்கோவையில் முதற்கட்டமாக 15 முதல் 18 வயது வரை உள்ள 22,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம். கோவை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்கள் 22, 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடியாக பள்ளிக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்த உள்ளோம். படிப்படியாக அடுத்த கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பள்ளியிலேயே நேரடியாக தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான முன்பதிவுஇன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் சிறுவர்களை நேரடியாக ஆன்லைன் மூலம் கோவின் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொரோனா, ஒமைக்ரான் நோய்த்தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என தெரிவித்தனர்.