மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இதுபோன்ற மதவெறியைத் தூண்டும் பயிற்சிகளை பள்ளிகளில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கோவை: கோவையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா பயிற்சிக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு கட்சியின் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாகா பயிற்சி நடைபெறும் பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இந்த நிலையில், இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அந்த பயிற்சி முகாமை பள்ளிகளில் நடத்துவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், கல்வி பயிலும் பள்ளிகளில் இதுபோன்ற மத சார்பிலான பயிற்சிகள் வெறுப்புணர்ச்சியை தூண்டும் என்றும் பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு பாஜகவினர் 300க்கும் மேற்பட்டோர் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தும் பொழுது கோவை மாவட்ட காவல்துறையினர் அமைதியாக இருந்துவிட்டு தங்களை ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கூட விடாமல் உடனடியாக கைது செய்ததாகவும் கூறினார்.
எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இதுபோன்ற மதவெறியைத் தூண்டும் பயிற்சிகளை பள்ளிகளில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.