மேலும், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், தப்பியோடிய 6 பேரை தேடி வருகின்றனர்.
கோவை: கோவை சூலூர் அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 25 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான குடோனை 40,000 ரூபாய்க்கு சாக்கோட்டையை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
சொக்கலிங்கம் கடந்த ஒரு வருடமாக குடோன் வாடகைக்கு எடுத்து, அதில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியினை கடத்தி வந்து சிவில் சப்ளை கார்ப்பரேஷன் சாக்குகளை அகற்றி துபாயில் இருந்து இறக்குமதி செய்வது போல் அச்சிடப்பட்ட வேறு சாக்குகளை மாற்றி வெளியிடங்களுக்கு லாரிகள் மூலம் கடத்திச் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்நிலையில், சூலூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கிருந்த 10க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள நொய்யல் ஆற்றுக்குள் தப்பியோடினர். இதில் 4 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர்.
அதில் காரைக்குடி சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சொக்கலிங்கம்(40), இவர் கும்பலுக்கு தலைமை ஏற்று செயல்பட்டதாக கூறப்படுகிறது. சிவகங்கை காரைக்குடி பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணு மகன் ராஜா (45), கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முத்துமாரி மகன் ஹரி கிருஷ்ணன் (20), கோவை ரத்தினபுரி சுப்பாத்தாள்வீதியைச் சேர்ந்த பட்டாணி மகன் ராஜா பட்டாணி (39) ஆகிய 4 பேர் சிக்கினர்.
மேலும், அங்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் இருந்த 25 டன் அரிசியுடன் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை மடக்கிப் பிடித்தனர். குடோனில் இருந்த ஆறு டன்னுக்கும் மேற்பட்ட அரசி மற்றும் மூட்டையில் இருந்த பருப்பு உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

இதோடு மட்டுமல்லாமல் ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து பிரபல கம்பெனிகளின் பெயரில் மூட்டையாக வைத்திருந்தது தெரியவந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட மூட்டைகள் அந்த குடோனில் இருந்தது தெரியவந்தது. மேலும், இத்தகைய பாலிஷ் செய்யப்பட்ட பிரபல கம்பெனியின் பெயரில் இருந்த மூட்டைகள் அருகில் உள்ள அரிசி கடைகளுக்கு வினியோகிப்பதாக சந்தேகம் எழுந்தது. இது சம்பந்தமாக அங்கிருந்த விசிட்டிங் கார்டுகள் கைப்பற்றப்பட்டது.

இதில் சில அரிசி கடை பெயர்களும், பிரபல ஓட்டல்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக உடனடியாக குடிமைப்பொருள் விநியோகப் பிரிவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக போலீசார் அப்பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த 30 டன் அரிசியை கைப்பற்றி பொள்ளாச்சி குடிமைப்பொருள் வினியோகத் துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.