கோவை: கடந்த ஜனவரி மாதம் கோவை தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கோவை: கடந்த ஜனவரி மாதம் கோவை தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அதில், திடீரென்று எழுந்து பேசிய ஒரு பெண்ணிடம், “நீங்க எந்த ஊரும்மா?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்க, அதற்கு அந்தப் பெண், “நான், எந்த ஊருன்னு கூடத் தெரியாமல், எதுக்கு கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்.?” என ஒருமையில் பேசினார்.
சர்ச்சையை ஏற்படுத்திய அப்பெண் அங்கிருந்து திமுக மற்றும் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டார். பின்னர், இது குறித்து பூங்கொடி என்ற அந்த பெண், திமுகவினர் அவரை சாதி பெயரால் திட்டி துன்புறுத்தியதாக அளித்த புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இச்சம்பவத்தில் திருப்புமுனையாக, இன்று கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகரை சந்தித்து திமுகவினர் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
என்னுடைய பெயர் சி.எம். ராஜேந்திரன். திமுகவின் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராகவும், கோவை வடக்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளராகவும் இருக்கிறேன்.
இந்த நிலையில் கடந்த 2.1.2021 -ஆம் தேதி, தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்ட மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, நானும் அந்த கூட்டத்தில் பங்கு எடுத்திருந்தேன். தலைவர் மு.க. ஸ்டாலினிடம், ஒவ்வொருவராக கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது, திடீரென ஒரு பெண் எழுந்து அந்த கூட்டத்தில் ரகளையை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டார். உடனடியாக, தலைவர் ஸ்டாலின் அந்தப் பெண்ணை வெளியே அனுப்பும்படி கூறினார். நாங்கள் அந்தப் பெண்ணை மிகவும் பாதுகாப்போடு அழைத்து வெளியே அனுப்பினோம்.
அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், எஸ். பி. வேலுமணியினுடைய தூண்டுதலின் பெயரில் அந்தப் பெண் பூங்கொடி என்பவர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் நான் உட்பட திமுகவைச் சேர்ந்த செல்லப்பன், ரங்கசாமி, பெருமாள் ராஜா, உட்பட 4 பேர் மீது ஜாதியைச் சொல்லி திட்டியதாகப் புகார் அளித்தார். மேலும், அதிமுகவைச் சேர்ந்த பூங்கொடி எனும் அந்தப் பெண் தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்னை ஜாதியைச் சொல்லி அசிங்கமாகப் பேசுகிறார்கள் என புகார் அளித்திருந்தார்.
பின்னர், எங்கள் மீது பி.சி.ஆர் ஆக்ட் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நாங்கள் அந்த வழக்கை சந்தித்து வந்தோம். இந்த நிலையில், தாசில்தாரர் அலுவலகத்திற்கு விசாரணைக்காகச் சென்று வரும் போது, புகார் அளித்த அந்தப் பெண் இந்து மதத்திலிருந்து, கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறியவர் என்பதும் அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று உறுதியாகி உள்ளது.
அப்படி என்றால் அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருகிறார். எங்கள் மீது பி.சி.ஆர். போடப்பட்ட வழக்கு பொய்யான வழக்கு என்பது இதன்மூலம் உறுதி செய்யப்படுகிறது.
தொடர்ந்து, நாங்கள் கடந்த 8 மாதங்களாக பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி, அலைச்சல்களையும் அலக்கழிப்பையும் சந்தித்துள்ளோம்.
ஆதலால், எங்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், தன்னுடைய மதம் மாறிய சான்றிதழை மறைத்து திமுகவை சேர்ந்த 4 பேர் மீது பொய்யான வழக்கு தொடுத்த அதிமுகவைச் சேர்ந்த பூங்கொடி, மகேஸ்வரி, மினி, உட்பட 4 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு, ராஜேந்திரன் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.