ஆடி அமாவாசையான இன்று, உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இன்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன், விஷ்ணு அருள்பாலித்தனர்.
திருப்பூர்: ஆடி அமாவாசையான இன்று, உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இன்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன், விஷ்ணு அருள்பாலித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலையில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள மிகப்பழைமையான அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆடிப்பட்ட சாகுபடியை துவங்கும் விவசாயிகள், பயிர் செழிக்கவும், கால்நடை வளம் பெருக வேண்டியும் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.
மேலும், உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து 100க் கணக்கான ரேக்ளா மாட்டு வண்டிகளில் வரும் பக்தர்கள் முன்னோர்களை நினைவு கூரும்வகையில், அவர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் கோவில்களுக்கு ஆடி அமவாசையான இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆடி அமாவாசையை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினர், மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் இன்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.