கோவை: வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்த கணவனிடமிருந்து விவாகரத்து கேட்ட மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய கணவன் மற்றும் அவரது உறவினரை காவல்துறை வலைவீசித் தேடி வருகின்றனர்.
கோவை: வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்த கணவனிடமிருந்து விவாகரத்து கேட்ட மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய கணவன் மற்றும் அவரது உறவினரை காவல்துறை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை, சரவணம்பட்டி அடுத்த எல்.ஜி.பி நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் லலிதா (31). இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மணிவண்ணன் என்பவரை குடும்பத்தார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். லலிதா சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அந்த சமயத்தில் மணிவண்ணன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார். மேலும் சொந்தமாகத் தொழில் செய்வதாகக் கூறி லலிதாவின் தந்தை ஆறுமுகத்திடம் இரண்டு லட்ச ரூபாயைப் பணமாக வாங்கியிருந்தார். தொடர்ந்து பணம் கேட்டு லலிதாவையும் அவரது குழந்தையையும் மணிவண்ணன் அடித்து உதைத்துள்ளார்.
இதை அடுத்து லலிதா அங்கிருந்து குழந்தையோடு புறப்பட்டு கோவையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். மேலும் விவாகரத்து கேட்டு லலிதா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள லலிதாவின் வீட்டிற்கு வந்து தகராற்றில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் லலிதா, அவரது குழந்தை, லலிதாவின் குடும்பத்தாரைத் தாக்கத் தொடங்கினர்.
இதில் காயமடைந்த அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து லலிதா சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறை மணிவண்ணன் உட்பட 2 பேரைத் தேடி வருகின்றனர்.