கோவை: கோவிலில் பக்தரிடமிருந்து செல்போன்கள் திருடிய திருடனை கையும் களவுமாகப் பிடித்து காவல்நிலையத்தில் பொது மக்கள் ஒப்படைத்தனர்.
கோவை: கோவிலில் பக்தரிடமிருந்து செல்போன்கள் திருடிய திருடனை கையும் களவுமாகப் பிடித்து காவல்நிலையத்தில் பொது மக்கள் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்குக் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் திருப்பூர் ராம் ராஜ் நகரைச் சேர்ந்த திருமலைச்சாமி (வயது 30). இன்று வனபத்ரகாளியம்மன் கோவிலுக்குத் தனது குடும்பத்தினருடன் வந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவரது மேல் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து விட்டு இளைஞர் ஒருவர் தப்ப முயன்றுள்ளார்.
அவர் சத்தம் போடவே அருகிலிருந்தவர்கள் இளைஞரை கையும் களவுமாகப் பிடித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருமலைச்சாமி கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் செல்வ நாயகம் இளைஞரிடம் நடத்திய விசாரணையில் உப்புப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (வயது 19) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.