கோவை செட்டிபாளையம்- பல்லடம் சாலையில் உள்ள விக்னேஷ் பார்க் என்ற குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை.
கோவை: கோவையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கபட்டு இருந்த நகை மற்றும் ₹40,000 ரூபாய் பணம் திருட்டுப்போன சம்பவம், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செட்டிபாளையம்- பல்லடம் சாலையில் உள்ள விக்னேஷ் பார்க் என்ற குடியிருப்பு பகுதியில் ரவிக்குமார்- ஜெகதீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். ரவிக்குமார் தனியார் நிறுவனத்தில், நான்கு சக்கர வாகனம் அலைன்மெண்ட் பணி செய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி, மயிலேரிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.
இந்த நிலையில், இன்று இருவரும் பணிக்கு சென்று விட்ட நிலையில், மாலை ஜெகதீஸ்வரி வீடு திரும்பிய போது, பூட்டிய வீட்டின் கதவு உடைக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கபட்டு இருந்த எட்டு பவுன் நகை மற்றும் ₹40,000 ரூபாய் திருடபட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, பட்டபகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அங்கு வசிப்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.