கோவை : மக்களவை பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் நடைபெற்றது.
கோவை : மக்களவை பொதுத்தேர்தலுக்காக 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தேர்தல் பணிகளுக்காக முடுக்கி விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கு. ராசாமணி தெரிவித்தார்.
17-வது மக்களவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தலைமையில் அரசியல் கட்சியினருடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேசியதாவது :- தேர்தலுக்கான அனைத்து நிலைகளிலும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. தேர்தல் நடைமுறைக்கு அனைத்து கட்சியினர் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். நன்னடத்தை விதிகளை ஏற்று அனைவரும் நடக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சி விளம்பரங்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகம் இருக்கக் கூடாது. தேர்தல் பணிக்காக பறக்கும் படை அமைக்கப்பட்டு 8 மணிநேர அடிப்படையில், 90 குழுக்கள் பணியைத் தொடங்கி விட்டது. மேலும், 50,000-க்கும் மேல் பணம் கொண்டு செல்பவர்கள் முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பறிமுதல் செய்யப்படும்.

அரசு வாகனங்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்கள், ஆம்புலன்ஸ் என எதில் சந்தேகம் இருந்தாலும் சோதனையிடப்படும். கோவை மாவட்டத்தில் உள்ள 3,072 வாக்குச் சாவடிகளில் 470 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 117 வாக்குச்சாவடிகள் மிகபதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. காந்தியடிகள், திருவள்ளுவர், அம்பேத்கர் சிலைகளைத் தவிர மற்ற சிலைகள் மறைக்கப்படும் அல்லது அகற்றப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம். வேட்புமனு தாக்கல் நடைபெறும் வரை புதிய வாக்காளர் சேர்க்கை நடைபெறும். சமூக வலைதளங்களை கண்காணிக்கத் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் பெய்டு நியூஸ் குறித்தும் கண்காணிக்கப்படும். பதற்றமான, மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
தமிழக - கேரள எல்லைகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இரு மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணிக்கு கோவை மாவட்டத்தில் 13 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், கோவை மாவட்டத்தில் புதிதாக 178 வாக்குச் சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளது, என்றார்.
இந்த பேட்டியின் போது, கோவை மாநகராட்சி துணை ஆனையர் பிரசன்ன ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்நேகா ஆகியோர் உடன் இருந்தனர்.