உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையில், தமிழ் மொழி பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பதாக வெளியாகி வரும் தகவல் உண்மையா..? இல்லையா..? என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையில், தமிழ் மொழி பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பதாக வெளியாகி வரும் தகவல் உண்மையா..? இல்லையா..? என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும், இந்த சிலைக்கு ‘statue of unity’, அதாவது 'ஒற்றுமையின் சிலை' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சிலையை பிரதமர் மோடி கடந்த மாதம் 31-ம் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில், இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் statue of unity என்ற சிலையின் பெயர் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் தமிழ் மொழியின் மொழிபெயர்ப்பு மிகவும் மோசமாக இருந்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது. statue of unity என்ற ஆங்கில வார்த்தையை ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என தமிழில் மொழிபெயர்த்து இருந்தாகக் கூறி, பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
ஆனால், அப்படி ஒரு பலகையே அங்கே வைக்கப்படவில்லை என்றும், தமிழ் தவறாக மொழி பெயர்க்கப்படவில்லை என்றும் மறுத்து பலர் சமூக ஊடகங்களில் பதிவு செய்கின்றனர். அது வெறும் போட்டாஷாப் வேலை என்றனர் சிலர்.
இதையடுத்து, இந்த படம் உண்மையா..? இப்படி ஒரு பலகை வைக்கப்பட்டது உண்மையா..? என்று பி.பி.சி. தமிழ் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் அலசியது. அப்போது, பி.பி.சி. குஜராத்தி செய்தியாளர் தேஜஸ் வைத்யா சிலையை சுற்றிலும் எடுத்த பல படங்களில் தவறான மொழி பெயர்ப்புடன் கூடிய இந்தப் பலகையும் இருந்தது தெரியவந்தது.
"அந்தப் பலகை இருந்தது நூறு சதவீதம் உண்மை. அது மறைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி எழுதியிருந்தது வெளியில் தெரிந்தது. அதை நான் தான் புகைப்படம் எடுத்தேன். நான் இந்தப் புகைப்படத்தை அக்டோபர் 30-ம் தேதி பிற்பகல் எடுத்தேன். அந்த சிலையை சுற்றி வைக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புப் பலகைகளையும் படம் எடுத்தேன்," " என்கிறார் பி.பி.சி. குஜராத்தி சேவையின் செய்தியாளர் தேஜஸ் வைத்யா. மேலும், "இப்போது அந்த பலகை அங்கு உள்ளதா, இல்லையா..? என்று தெரியவில்லை" என்றார்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிட்டட் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் சந்தீப்குமார் பி.பி.சி. குஜராத்தி சேவையிடம் கூறியதாவது :- சிலையைச் சுற்றி இருக்கும் அறிவிப்புப் பலகைகள் எல்லாவற்றையும் லார்சன் & டூப்ரோ நிறுவனமே தயாரித்தது. சமூக ஊடகங்களில் அது பற்றிப் பேசப்படும் கருத்துகளை அடுத்து அந்த நிறுவனத்துடன் பேசினோம். அதை அகற்றிவிட்டதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்தப் புகைப்படம் இரண்டு நாள்கள் முன்பு எடுக்கப்பட்டது. எனினும். அந்தப் பலகை அகற்றப்படாமல் இருந்தால் நாங்கள் உடனடியாக அகற்றிவிடுவோம், என்றார்.
இதனிடையே, சர்தார் வல்லபாய் படேலின் (STATUE OF UNITY) சிலை திறப்பு விழாவில் வைக்கப்பட்டிருந்த பிழையான தமிழ் பெயர்ப் பலகை சரி செய்யப்பட்டு மீண்டும் அமைக்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.
Source: https://www.bbc.com/tamil/india-46054914