நவம்பர் 20
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உட்பட 7 வழக்குகள் மீதான விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, தி.மு.க. எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் கடந்த 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, முதலமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
மேலும், திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும், தடையை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குகளை 20-ம் தேதிக்கு, அதாவது இன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அதன்படி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன . அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தரப்பு வாதங்களை கேட்ட பின்னர், இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.