அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவி மாணவி அனிதாவின் மரணத்திற்க்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நேற்று (செப்.,5) கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், போத்தனூரில் ரயில் மறியலும் நடைபெற்றது. இதேபோல, கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.
கோவை, சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதி தலைவர் ஹனீப்கான் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் அப்பாஸ் முன்னிலை வகித்தார். இதில், மத்திய மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் கட்சி நிவாகிகள் கலந்து கொண்டனர்.

கவுண்டம்பாளையத்தில், சட்டமன்ற தொகுதி தலைவர் அமீர் அப்பாஸ் தலைமையில் ஜி.என்.மில்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இதில், தொகுதி செயலாளர் யாசர், மாவட்ட செயலாளர் ரோஷன், மத்திய மாவட்ட தலைவர் அப்துல் காதர், பி.எப்.ஐ துடியலூர் டிவிசன் தலைவர் உசேன் மற்றும் கட்சி செயல்வீரர்கள் மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதேபோல், கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை கிணத்துக்கடவு தொகுதியின் சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிணத்துக்கடவு தொகுதி தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு, தெற்கு மாவட்ட தலைவர் அன்சர் செரீப் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி நிர்வாகிகள் தாஜுதீன், ஆரீப், கமால், முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ரயில் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
