அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி சாதியவாத, மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது எனவும், திமுக தலைவர் கலைஞருக்கு பின்னர் திராவிடத்தை பற்றி யாரும் பேசக்கூடாது என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கோவையில் நடைபெற்ற மக்கள் மேடை அமைப்பு துவக்க விழாவில் தெரிவித்தார்.

கோவை மத அடிப்படைவாதிகளின் களமாக மாறாமல் தடுக்க மார்க்சிய, அம்பேத்காரிய, பெரியாரிய, ஜனநாயக மதசார்பற்ற இயக்கங்கள் ஒன்று இணைந்து கோவை மக்கள் மேடை என்ற அமைப்பினை துவங்கியுள்ளனர்.
இந்த கோவை மக்கள் மேடை அமைப்பின் துவக்கவிழா கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த துவக்கவிழா நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்டோரும் 15க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும், முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டன.
இதனைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:- "வன்முறைகளை தூண்டுவதன் பின்னணியை இளைய சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும். மதம், சாதி ஆகியவற்றின் பின்னணியில் அரசியல் செய்கின்ற தற்குறிகள் இருக்கின்றனர். அனைத்து விதமான வன்முறைகளின் பின்னணியில் அரசியல் செய்யும், அரசியல் ஆதாயம் தேடும் தற்குறிகள் இருக்கின்றனர் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வாக்கு வங்கியாக அணி திரட்ட இந்துக்கள், இந்துகள் அல்லாதவர்கள் என ஆர்எஸ்எஸ் பிரிக்கின்றது. இந்தியா முழுவதும் இதை ஒரு யுக்தியாக கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை யுக்தியாகவே இந்து அமைப்புகள் பயன்படுத்துகின்றன. இந்து அமைப்புகளால் திட்டமிட்டு தூண்டப்படுகின்ற இது போன்ற வன்முறையை தடுக்கவே கோவை மக்கள் மேடை அமைப்பு துவங்கப்படுகின்றது.
அதிமுக இரு அணிகள் இணைப்பால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைக்கின்றார். அதிமுக மூலம் தமிழக அரசியலுக்குள் ஆதிக்கம் செலுத்துவதற்கு பாஜக ஊடுறுவுகின்றது. இதற்கு தலைமையில்லாத அதிமுக என்ற அமைப்பினை பாஜக பயன்படுத்துகின்றது.
அதிமுக பலவீனத்தை பயன்படுத்தி சாதியவாத, மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற அனுமதித்து விடக்கூடாது. அதிமுகவில் ஊடுறுவது என்பது பெரியார் அரசியலுக்கு எதிரானது. திமுக தலைவர் கலைஞருக்கு பின்னர் திராவிடத்தை பற்றி யாரும் பேசக்கூடது என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம். மதவாத, சாதியவாத அமைப்புகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் மேடை அமைக்கப்பட வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசுகையில், "ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் ஒற்றை தேசம், ஒற்றை கலாச்சரம், ஒற்றை மொழி என பாஜக செயல்பட்டு வருகின்றது. ஒரு தேசம் என இவர்கள் வரையறுப்பது இந்துக்களுக்கான தேசம் என்பதாகும். இது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது.

கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த இந்துத்துவ அமைப்புகள் முயற்சிக்கின்றனர். அதை முறியடிக்கவே இந்த மக்கள் மேடை என்ற அமைப்பு துவங்கப்படுகின்றது.
தமிழகத்தில் அதிமுகவை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தங்கள் கருத்துகளை முன்னெடுத்து செல்வதற்கான கருவியாக பயன்படுத்துகின்றது. தங்கள் நோக்கத்தை அதிமுக மூலமாக நிறைவேற்ற பாஜக முயல்கின்றது. திராவிட இயக்கங்கள், இடதுசாரி, அம்பேத்காரிய இயக்கங்கள் இதை எதிர்கொண்டு அவர்களை பின்னுக்கு தள்ள வேண்டும்" என பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
இறுதியாக திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பேசுகையில், "கோவை மக்கள் மேடை நிகழ்ச்சி தமிழக அளவில் விரிவுபடுத்த வேண்டும். மதங்களுக்கு இடையே வெறுப்பை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தூண்டிக்கொண்டு இருக்கின்றது. மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்பதை யார் முடிவு செய்வது. பெண்கள் மீதான வன்முறைகளின் போது பாஜக தலைவர்கள் பெண்களையே குறைசொல்கின்றனர். மதரீதியாக, ஜாதிரீதியான மோதல்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

உலகில் மதரீதியான தாக்குல் நடைபெறும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கின்றது. கடவுள் பற்றி யாரும் பேசக்கூடாது என புதிதாக ஒரு பிரச்சாரம் நடைபெறுகின்றது. நாத்திகர்களுக்கு கருத்து சொல்ல உரிமையில்லை என்ற நிலையை ஏற்படுத்த பார்க்கின்றனர்.
இந்து அமைப்புகள் மதங்களுக்கு இடையே வெறுப்புணர்ச்சியை தூண்டுகின்றன. அடுத்ததாக சாதிகளுக்கிடையே வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தி கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.
அதிமுக அணிகள் இணைப்பிற்கு உடனடியாக டிவிட்டரில் வாழ்த்து சொல்லும் அக்கறையை பிரதமர் மோடி தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வு விவகாரத்திலும் காட்டி இருக்கலாம். டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் பிரச்சனையில் இந்த அக்கறையை காட்டி இருக்கலாம். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் வெறுப்பு அரசியலை விதைத்து நம்மை பிரித்து ஆளவிடக்கூடாது. தமிழர்களாய் ஒற்றுமையாய் இருக்க மக்கள் மேடை அமைப்பை கிராமங்கள் தோறும் ஏற்படுத்த வேண்டும்" என கனிமொழி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
