அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தி (35). கோவை தடாகம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை குழந்தை இல்லாத ஒரு தம்பதியினருக்கு 2000 ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளார்.

குழந்தையை வாங்க இருந்த தம்பதியினருக்கு சில சந்தேகங்கள் எழுந்ததால் இது குறித்து உக்கடம் பகுதியில் உள்ள சைல் லைன் அமைப்பினரிடம் தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் ஆய்வாளர் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு அவ்வமைப்பினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து தடாகம் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து ஆனந்தியிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் ஆகாமலேயே தவறான தொடர்பால் பிறந்த குழந்தை என்பதால் விற்க முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிறந்த மற்றொரு குழந்தையை சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக விசாரணையில் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல குழுவினர் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் 2000 ரூபாய்க்கு குழந்தையை விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.