கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை- பொள்ளாச்சி வரை செல்லும் அகல ரயில் பாதை பாசஞ்ஜர் ரயில் இன்று மதியம் 1.35 மணிக்கு துவங்கியது.
கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துகடவு வழியாக பொள்ளாச்சி வரை செல்லம் பாசஞ்ர் ரயில் இன்று தனது சேவையினை துவங்கியது. கோவையிலிருந்து போத்தனூர் வரை ஏற்கனவே அகல ரயில் பாதை உள்ள நிலையில் போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரை அகல ரயில் பாதையாக மாற்ற பல வருடங்கள் கடந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்த போது விரைவில் சேவை துவங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, பணிகள் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் முடிந்து பயணிகளுக்கான ரயில் சேவை இன்று துவங்கியது.
தினமும் மதியம் 1.35-க்கு கோவையிலிருந்து, போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்லும் இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் பொள்ளாச்சி சென்றடைகிறது. பொள்ளாச்சியில் இருந்து மதியம் 3.50-க்கு புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கோவை வந்தடைகிறது.
இதற்கான கட்டணம் 15 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயங்கும் என கோவை ரயில் நிலைய மேலாளர் சின்னராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பயணிகள் கூறும்போது, மக்களின் நீண்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த கட்டணம் என்பதால் பலரும் பயனடைவார்கள் என தெரிவித்தனர்.