கோவையை சேர்ந்த தொழிலதிபரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கு தொடர்பாக இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் பாலாஜி இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவையை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேலு என்பவர் சமையலறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த 2010ம் ஆண்டு அவரை தொடர்பு கொண்ட சுரேஷ் பாலாஜி தனது பெயரை பிரகாஷ் என்று அறிமுகம் செய்ததோடு தாம் கர்னாடக அரசின் துணை செயலாளராக பணியாற்றி வருவதாகவும், அரசு நிறுவனங்களுக்கு உபகரணங்கள் பெற டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டெண்டர் பார்ம் உள்ளிட்டவைகளை அனுப்ப இரண்டரை லட்சம் ரூபாயை வங்கி மூலம் மாற்றம் செய்யுமாறும் கூறியுள்ளதார்.
இதனையடுத்து, ராஜவேலு அப்பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் மீண்டும் மூன்றரை லட்சம் ரூபாயை அனுப்புமாறு பிரகாஷ் கேட்டதால் சந்தேகமடைந்த ராஜவேலு, இது தொடர்பாக கர்னாடக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது, பிரகாஷ் என்பவர் அப்பதவியில் இல்லை எனவும் உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக எவ்விதமான டெண்டரும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜவேலு இது தொடர்பாக கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சந்திரசேகர், அவரது மகன் சுகேஷ் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கு கோவை இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிரிசனர்ஸ் டிரான்சிட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சுகேஷை இரயில் மூலம் கோவை அழைத்து வந்த போலீசார் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சுகேஷை வருகிற 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சுகேஷை போலீசார் மீண்டும் இரயில் மூலம் டெல்லி அழைத்துச் சென்றனர்.