உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு கோவை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
அதன்படி, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல், திறந்தவெளியில் மலம் கழித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார தூய்மை குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவை மாநகரத்தில் இன்று நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 100 சதவிகிதம் குப்பை தரத்தை பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேன் சிறப்புரையாற்றினார்.
அப்போது, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அன்றாடம் வார்டுவாரியாக சென்று குப்பைகளை தரம் பிரித்து பெற்றுச்செல்கின்றனர். மக்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி குப்பையினை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். தொடர்ந்து, கோவை மாநகராட்சியை சுகாதாரமிக்க, தூய்மையான மாநகரமாக பாதுகாக்க வேண்டும் என்றார்.