"வனவிலங்கு பிரச்சனை"-யான யானைகள் அல்லது பிற உயிரினங்கள் மூலம் மனிதர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது என பல்வேறு ஆய்வுகள் மூலம் நிபுணர்களால் வாதிட்டவாறே உள்ளன. ஆனால், அவ்வாறான மோதல்கள் மனித நடவடிக்கைகளால் தான் ஏற்படுகிறது. அதுவும் குறிப்பாக பொள்ளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, மான், வரையாடு, குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனைக் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். அவ்வாறாக வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் அங்குள்ள விலங்குகளுக்கு தாங்கள் கொண்டு வரும் உணவுகளை வழங்கி மகிழ்வர்.

இதில், பெரும்பாலும் மனிதர்களுடன் ஒன்றிணைந்து பழகுவது குரங்குகள் தான். சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்குவதால் அவை தனது இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறுபட்டு மனிதர்களிடத்தில் விளையாட ஆரம்பிக்கிறது. மேலும், பயணிகள் கொண்டு வரும் பைகளை குரங்குகள் தானாகவே பறித்துவிட்டும் ஓடி விடுகின்றன. சில நேரங்களில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும் குரங்குகள் சேதப்படுத்தி விடுகின்றன.
மேலும், அங்குள்ள வரையாடுகள் இயல்பாகவே பயந்த குணம் உடையது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் சுற்றித் திரியும் வரையாடுகளின் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட இடையூறுகளில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் அங்கு வரும் யானைகளையும் சுற்றுலாப் பயணிகள் விட்டுவைப்பது இல்லை. புகைப்படம் எடுப்பது, கூச்சலிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தங்களது இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறுபட்டு அங்குள்ளோரை தாக்குவதும், அல்லது மாறாக ஆனைமலை குடியிருப்பு பகுதியில் உள்ள மனிதர்களை தாக்குவதும் நடைபெறுகிறது.

இதனைத் தடுக்கும் விதமாக தற்போது வால்பாறை சாலையில் ஆழியார் முதல் அட்டகட்டி வரை 15 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள 15 ஊசிமுனை வளைவுகளிலும் கூடுதலாக 6 வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அவ்வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளிடையே இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.