கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வாரம் முழுவதும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Coimbatore: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகே அமைந்துள்ள பரளிக்காடு பகுதி, காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான சூழல் சுற்றுலா மையமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதி, கோவை காந்திபுரத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காரமடையில் இருந்து 30 கிலோமீட்டரும் தொலைவில் அமைந்துள்ளது.




காரமடை வனத்துறை மற்றும் பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இந்த சூழல் சுற்றுலா, சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பொதுவாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.




பரளிக்காடு சூழல் சுற்றுலாவின் முக்கிய அம்சங்களாக பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்களின் பாரம்பரிய உணவுகள், அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல், வனப்பகுதியில் நடைப்பயணம் மற்றும் பழங்குடியினரின் கலாசார நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் பாரம்பரிய உணவு வகைகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.




கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் இயற்கை மற்றும் நீர்நிலைகள் அமைந்த பகுதிகளுக்கு அதிகம் சென்று வருகின்றனர். இதையடுத்து, மே 1 முதல் மே 31 வரை தினமும் பரளிக்காடு சூழல் சுற்றுலா இயக்கப்படும் என காரமடை வனச்சரகர் அறிவித்திருந்தார். இதனால், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.




இந்நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரளிக்காடு சூழல் சுற்றுலா இந்த வாரம் முழுவதும் தற்காலிகமாக மூடப்படுவதாக காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை சூழ்நிலை சாதகமான பிறகு மீண்டும் சூழல் சுற்றுலா தொடங்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....