“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், பரப்புரை மேற்கொண்டார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டார். 



அப்போது பேசிய சுப. வீரபாண்டியன், “செந்தில் பாலாஜி தொட்டதே வெற்றி என்றால், அவர் நேரடியாக வேட்பாளராக நிற்கும் போது அந்த வெற்றி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை நாமே புரிந்துகொள்ளலாம். கருப்பு-சிவப்பு கொடியின் கீழ் நிற்பவர்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்து பேசுவதில்லை”, என்றார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வானதி சீனிவாசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததை எடுத்துக்காட்டாக கூறிய அவர், “இதுதான் ஒரு முதலமைச்சரின் பண்பு. எச். ராஜா மருத்துவமனையில் இருந்தபோதும் அவரை நலம் விசாரித்தவர் ஸ்டாலின். ஆனால் அவர் குறித்து தவறாக பேசியவர்களுக்கே பின்னர் நிலைமை மாறியது” என குறிப்பிட்டார்.

அண்ணாமலை குறித்து விமர்சித்த அவர், “அறிவாலயத்தின் அடிச்செங்கல் வரை இடிப்பேன் என்று கூறியவர், தனது செங்கலே உருவி போனது. அவருக்கு கட்சியிலும் பொறுப்பு இல்லை, வேட்பாளராகவும் நிற்கவில்லை; ஒரு ஊராகச் சென்று பேசிக்கொண்டு இருக்கிறார்” என்றார்.

பெண்களுக்கான திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், “இந்த அரசு பெண்களுக்கான அரசு. வழங்கப்படுவது இலவசம் அல்ல, உரிமைத் தொகை. பெண்களின் சுயமரியாதையை காக்கும் நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வேண்டும், ஆனால் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கக் கூடாது. ஸ்டாலின் அரசு அடுத்த தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காக செயல்படுகிறது” என்றார். மேலும், CAA சட்டம் சிறுபான்மை மக்களை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜயை குறித்துப் பேசுகையில், “ஒருவர் புதியதாக அரசியலுக்கு வந்துள்ளார். அவர் நல்ல நடிகராக இருக்கலாம்; அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு மக்கள் சேவைக்கு வந்ததாக கூறுவது நம்பத்தகுந்ததா? 200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு கதாநாயகனிடமிருந்து முதலமைச்சர் பதவிக்கு செல்லும் ஆசை – இது தியாகம் அல்ல, அதிகார ஆசை. முதலமைச்சர் பதவி என்பது தியாகம் அல்ல” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “விஜய் எந்த துறவையும் மேற்கொள்ளவில்லை. பணமும் புகழும் இருந்தும் அதற்கு மேலாக அதிகாரம் வேண்டும் என்ற ஆசையால் வந்துள்ளார். அவரை மீண்டும் திரைப்படத்திற்கே அனுப்புங்கள்; விஜய்க்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை” என்றார். அதேபோல், மற்றொருவரை குறித்தும் மறைமுகமாக விமர்சனம் செய்து, “மலிவு விலைக்கு சென்றவர் பற்றி பேச தேவையில்லை” என சீமானை குறிப்பிட்டார்.

தமிழக அரசியல் நிலைமை குறித்து அவர் கூறுகையில், “இப்போது நடைபெறுவது மூன்று முனை, நான்கு முனை போட்டி அல்ல; தமிழ்நாடு மற்றும் டெல்லி இடையிலான போட்டி. தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள வேண்டுமா, அல்லது டெல்லி ஆள வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். தமிழ்நாட்டை நாமே ஆள வேண்டும் என்றால் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

அதிமுக மற்றும் பாஜக குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “அடிமைகளால் நாட்டை ஆள முடியாது. அதிமுக தனது அடையாளத்தை இழந்து, அமித்ஷா திமுக ஆக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை; இங்கு தாமரை மலராது. இரட்டை இலை கூட தாமரையின் இலைகளாக மாறிவிட்டது” என்றார்.

இறுதியாக, “நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம். 2021ஆம் ஆண்டு ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றபோது ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தலை நிமிர்ந்தார்; அது ஒரு சிங்கம் தலை நிமிர்வதைப் போல இருந்தது” என உரையை நிறைவு செய்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...