கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அடி ஆழமுள்ள தொட்டியில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 மணி நேரம் ஆகியும் மீட்பு பணி நடைபெறுகிறது.


Coimbatore: கோவையில், கழிவுநீர் தொட்டியில் மோட்டார் ரிப்பேர் செய்ய இறங்கிய 2 மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் தவறி விழுந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அவர்களது நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.




கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர் ஆங்காங்கே கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலம் உக்கடம் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய மண்டலம் 69வது வார்டுக்கு உட்பட்ட சாய்பாபா காலனி பாரதி பார்க் 1வது வீதியில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.




இங்கு 15 அடி விட்டமும், 40 அடி ஆழமும் கொண்ட கழிவுநீர் தொட்டி உள்ளது. இதில் 60 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் மூலம் கழிவுநீர் பாதாள சாக்கடைக்குள் உந்தப்படுகிறது. இந்த மோட்டார் பழுதானதை அடுத்து, அதனை சரிசெய்து, கிரேன் மூலம் மீண்டும் தொட்டிக்குள் இறக்கும் பணியில் மாநகராட்சி தற்காலிக ஒப்பந்த ஊழியர்களான ரத்தினபுரியைச் சேர்ந்த அர்ஜுன்குமார் (38), மற்றும் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.




மோட்டாரை கீழே இறக்கி பொருத்திவிட்டு, இருவரும் ஏணிப்படிகள் மூலம் மேலே ஏறிக்கொண்டிருந்த போது, அர்ஜுன்குமாரின் தலை உள்ளேயிருந்த பைப்பில் இடித்ததில், நிலை தடுமாறி தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடன் சென்ற சுரேஷ் அவரை காப்பாற்றுவதற்காக கீழே இறங்கிய போது, அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக மயக்கம் ஏற்பட்டு, அவரும் தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.




இது குறித்து தகவல் அறிந்ததும் சக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித்துறை அதிகாரிகள், இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் தவறி விழுந்த தொட்டிக்குள் சுமார் 25 அடிக்கும் அதிகமாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் அதனை கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் வெளியேற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது.




இருவரும் தொட்டிக்குள் விழுந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதால், இருவரது நிலையும் என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலையுடன் சம்பவ இடத்தின் அருகே காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.


Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...