வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலனையும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.



வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கும் வகையில், பொது நலன் பாதுகாக்கப்படுவதையும், சமூக நலன் முன்னிறுத்தப்படுவதையும், லாபத்தை லட்சியமாக கொள்ளாமல், மக்களுக்கான சேவை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாக கொண்டு செயலாற்றுபவைதான் பொதுத்துறை நிறுவனங்கள்.

இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தங்கு தடையின்றி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம். இந்த நோக்கத்தையே சிதைக்கும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

"மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு", "கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம்", "விசைத் தறிக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம்" போன்ற பல வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை வாட்டி வதைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. 

ஒன்பது மாதங்களுக்கு முன்னர், வீடு, வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றிற்கான மின் கட்டணத்தை பன் மடங்கு உயர்த்தி மக்களை வாட்டி வதைத்த திமுக அரசு, தற்போது வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருக்கிறது. 

திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு காரணம் முந்தைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும், மத்திய அரசும் என்று அரசு செய்திக் குறிப்பில் சூசகமாகத் தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு மின் கட்டணத்தை பன் மடங்கு உயர்த்தியும், தரமான மின்சாரத்தை தங்கு தடையின்றி வழங்காத நிலையில், ஒடிசாவில் உள்ள சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் பணி காலதாமதமாவதன் காரணமாக ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

வணிகப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படுவதன் காரணமாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயரக்கூடும். இதன்மூலம் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். மின் கட்டண உயர்வு என்பது ஒரு சங்கிலி பிணைப்பினை போன்றது.

விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்ற இந்தத் தருணத்தில், நாட்டின் பண வீக்கம் ஏறிக் கொண்டே இருக்கின்ற இந்தச் சமயத்தில், சொத்து வரி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, எரிவாயு விலை உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, என பலவற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இந்தச் சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை தி.மு.க. அரசு உயர்த்தியிருப்பது நியாயமற்ற செயல். "சொல்வதைச் செய்வோம்" என்று மக்களிடம் வாக்களித்து விட்டு, சொல்லாததை செய்யும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொண்டு மக்கள் விரோதச் செயல்களை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. 

விலைவாசி உயர்வினைக் கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலனையும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சரை மு.க.ஸ்டாலினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...