கோவையில் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் பங்களிப்பு நிதி பெறுவது குறித்து ஆலோசனை!

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலக‌த்தில்‌ ஆணையர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ 2023-24 ஆண்டிற்கான முதலமைச்சரின்‌ ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌, தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களிடம் பங்களிப்பு நிதி பெறுவது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


கோவை: கோவையில் முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் பங்களிப்பு நிதி பெறுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ 2023-24 ஆண்டிற்கான முதலமைச்சரின் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌, தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களிடமிருந்து சமுதாய கூட்டாண்மை பொறுப்பு (CSR) நிதியிலிருந்து பங்களிப்பு பெறுவது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ நடைபெற்ற இந்த கூட்டத்தில், கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையா்‌ பூபால்ரெட்டி‌, கோவை‌ மாநகர காவல்‌ ஆணையா்‌ பாலகிருஷ்ணன்‌‌, கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளா்‌ பத்ரிநாராயணன்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், முதலமைச்சரின்‌ “நமக்கு நாமே” திட்டத்தின்‌ மூலமாக பள்ளி கூடங்கள்‌ மேம்படுத்துதல்‌, பொது சுகாதார மையம்‌ அமைத்தல்‌, கற்றல்‌ மையங்கள்‌ அமைத்தல்,‌ அங்கன்வாடி மையம்‌ அமைத்தல்‌ மற்றும்‌ புனரமைத்தல்‌, சமுதாயக்‌ கூடம்‌ அமைத்தல்‌ மற்றும்‌ புனரமைத்தல்.

பூங்காக்கள்‌ அமைத்தல்‌, பொழுதுபோக்கு மற்றும்‌ விளையாட்டு வசதிகள்‌ ஏற்படுத்துதல்‌, உடற்பயிற்சி கூடம்‌ அமைத்தல்‌, பள்ளி, மருத்துவமனைகள்‌ அருகே கண்காணிப்பு கேமராக்கள்‌ அமைத்தல்‌ போன்ற திட்டங்களை கோவை‌ மாநகராட்சி பகுதிகளில்‌ செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



இந்த திட்டங்களின் மதிப்பீட்டு தொகையில்‌ பொதுமக்களின்‌ பங்களிப்பாக மூன்றில்‌ ஒரு பங்கு தொகை (33%) காசோலையாக வழங்கினால்‌ மீதமுள்ள மூன்றில்‌ இரண்டு பங்கு தொகை (67%) மாநில அரசால்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநகராட்சியால்‌ பணி மேற்கொள்ளப்படும்‌.

கோவை‌ மாநகராட்சி பகுதிகளில்‌ செயல்படுத்திட மதிப்பீட்டு தொகையில்‌ பொதுமக்களின்‌ பங்களிப்பாக பங்கு தொகை (50%) காசோலையாக வழங்கினால்‌, மீதமுள்ள பங்கு தொகை (50%) மாநில அரசால்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநகராட்சியால்‌ பணி மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, 100% பங்களிப்பாகவும்‌ நிதியுதவி வழங்கலாம்‌ எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2022-23ஆம்‌ நிதியாண்டில்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ நமக்கு நாமே திட்டத்தில்‌ ரூ.4.11 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில்‌ ரூ.4.41 கோடி வசூலித்து, இலக்கை விட அதிகமாக பொதுமக்களிடமிருந்து பங்களிப்பு பெறப்பட்டது.

2023-24-ஆம்‌ நிதியாண்டில்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ நமக்கு நாமே திட்டத்தில்‌ ரூ.4.11 கோடி இலக்கு நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. முழு இலக்கை அடைய அனைவரும்‌ ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்ளப்படுவதாக குறிப்பிட்டனர்.

மேலும்‌, காவல்துறை சார்பில்‌ இரு சக்கர மின்சார வாகனங்கள்‌ வாங்குதல்‌, நவீன சோதனை சாவடிகள்‌ அமைத்தல்‌, முக்கிய இடங்களில்‌ உள்ள வாகன நிறுத்தங்களில்‌ Free Lift வசதி, சி.சி.டிவி. கேமராக்கள்‌ பொருத்துதல்‌ உள்ளிட்ட பணிகளுக்கு பங்களிப்பு நிதி வழங்க மாநகர காவல்‌ ஆணையர்‌ மற்றும்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ ஆகியோர்‌ கேட்டுக்‌ கொண்டனர்‌.

எனவே, மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த ஆர்வமுள்ள பொதுமக்கள்‌, நல்வாழ்வு சங்கங்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌, தனியார்‌ தொண்டு நிறுவனங்கள்‌ ஆகியோர்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தாராளமாக நிதியுதவி வழங்க முன்வர வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையர் பிரதாப் கேட்டுக்கொண்டார்‌.

இக்கூட்டத்தில்‌ வருமான வரித்துறை இணை ஆணையர்‌ ஸ்ரீவிஜய்‌‌, வருமான வரித்துறை துணை ஆணையர்‌ கார்த்தி, மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா‌, மாநகர‌ பொறியாளர் இளங்கோவன்‌, தொழில்‌ நிறுவன பிரநிதிகள்‌, தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...