திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பேருந்து நிலையம் முன்பு உள்ள பானி பூரி கடையில் பணிபுரிந்து வரும் வட மாநில இளைஞரை மதுபோதையில் இருந்த தமிழ் இளைஞர்கள் தாக்கியதில், அவரது மண்டை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பானிபூரி கடையில் பப்பு என்ற வட மாநில இளைஞர் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில் மது போதையில் பானிபூரி கடைக்கு வந்த தமிழ் இளைஞர்கள் பாலகிருஷ்ணன்,செவிக்ஷன், சக்தி பிரணவ், மற்றும் சாந்து ஆகிய இளைஞர்கள் பானி பூரி சாப்பிட வந்துள்ளனர்.
அங்கு பானி பூரி சாப்பிட்ட பின்பு பானிபூரி கடையில் பணிபுரிந்து வந்த பப்பு என்ற இளைஞருடன் மது போதையில் இருந்த நான்கு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திடீரென்று வடமாநில இளைஞரும் மது போதையில் இருந்த நான்கு இளைஞர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், வட மாநில இளைஞர் பப்புவின் தலையில் காயம் ஏற்பட்டது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை தடியடி நடத்தி துரத்தியுள்ளார். கடையில் பணிபுரிந்த சக ஊழியர்களும் காவல் ஆய்வாளரும் நான்கு தமிழ் இளைஞர்களையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தலையில் காயம் அடைந்த வடமாநில இளைஞர் பப்பு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில மாதங்களாக திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் மற்றும் வட மாநில இளைஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், பல்லடத்தில் வட மாநில இளைஞரும் தமிழ் இளைஞர்களும் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.