திருப்பூர் அடுத்த அறிவொளி நகர் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரணை.
திருப்பூர்: திருப்பூர் அருகே போலீசாரின் சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் அருகேயுள்ள அறிவொளி நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் அப்பகுதியில் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில் கொங்கு நகர் பகுதி உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வீட்டின் உரிமையாளரான உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிராம் மிஸ்ரா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.