கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள குளியல் தொட்டியில் இறங்கிய கல்யாணி யானை உற்சாகத்துடன் குளியல் போட்டு மகிழ்ந்தது.
கோவை: பட்டீஸ்வரர் கோவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள யானை குளியல் தொட்டியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
கோவை பேரூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கல்யாணி யானை கடந்த 1996ஆம் ஆண்டு பேரூர் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டது. யானையைப் பாகன் ரவி பராமரித்து வருகிறார். இந்த யானை கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. யானையைப் பார்க்கவே கோவிலுக்கு வரும் தனி கூட்டமும் இருக்கிறது.
கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகும் நிலையில், யானை குளிக்கவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து குளியல் தொட்டி அமைக்க பேரூர் கோவில் நிர்வாகத்தினர் பல பகுதிகளில் இடம் தேர்வு செய்து வந்தனர். இறுதியாக கோவிலுக்கு அடுத்துள்ள அங்காளம்மன் கோவில் பின் பகுதியில் சுமார் 5.5 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டது.
இந்த பகுதியில் கல்யாணி யானை குளிக்க பெரிய அளவிலான குளியல் தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து யானை குளியல் தொட்டி 4 அடி உயரத்திற்கு 1,20,000 லிட்டர்கள் கொள்ளளவில் அமைக்கப்பட்டது.
யானை குளியல் தொட்டி 10 மீட்டர் அகலம், 10 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் உயரம். யானை நடைபாதை 300 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம், யானை செல்லும் பாதையின் சாய்வு தளம் 12.40 மீட்டர் நீளம், 420 மீட்டர் அகலம் எனக் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
மேலும் குளியல் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் மோனோ பிளாக் மோட்டார் மற்றும் யானை குளிப்பதற்கு ஷவர் பொருத்தப்பட்டுள்ளது. யானைக்கு நிழற் குடையும் அமைக்கப்படவுள்ளது.
இதேபோல் அதே பகுதியில் யானை நடைப்பயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்று மண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு கல்யாணி யானை 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போட உள்ளது. 10 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளது.
இந்த யானை குளியல் தொட்டியை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதன் பின்னர் யானை குளியல் தொட்டியில் இறங்கி நீரில் விளையாடி உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்தது.
இதனை அப்பகுதியில் திரண்டவர்கள் கண்டு ரசித்தனர்.