கோத்தகிரி அடுத்த கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர், கோழிக்கரை ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளன.
இதில் கோழிக்கரை பழங்குடியின கிராமத்தின் சாலையை மேல்கூப்பு, கீழ்கூப்பு, செம்மநாரை, வாகப்பனை, அட்டடி, கோழித்தொரை உள்ளிட்ட கிராம மக்கள் பிரதான சாலையாக தங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் சாலையோர காப்பி, தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக வனத்துறையினர் அப்பகுதியில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு, குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.