கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதோடு, சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மீதும் மோதி நின்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
கோவை: சேலம் மாவட்டத்தில் இருந்து கேரளா நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கோவை மதுக்கரை நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மற்றொரு லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மீது அந்த லாரி மோதியது.
அதிகபாரத்துடன் இருந்ததால் அடுத்ததடுத்து இரும்பு அறிவிப்பு பலகைகள் மற்றும் சாலை ஓரத்தில் வீட்டுடன் இருந்த கடை மீது அந்த லாரி பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த பாலத்துறையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி ஓட்டுநர் பாஸ்கரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரத்தில் அந்த வீட்டின் வெளியே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.