அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என தனித்தனியாக இல்லாமல் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும், பாஜக நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அதிமுகவில் உள்ள தலைமை பிரச்சினை குறித்தும் இடைத்தேர்தல் குறித்து பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தமிழக பாஜக தலைமை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து சென்னை தி.நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பேசியதாவது, 1972ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் தீய சக்திகளை வீழ்த்த அதிமுகவை உருவாக்கினார். இப்போதும் அதற்கான தேவை உள்ளது.
தமிழக மக்களுக்கு எதிராக திமுகவில் உள்ள ஒரு குடும்பம் செயல்பட்டு வருகிறது. தமிழ் மக்கள் திமுகவிற்கு எதிராக உள்ளனர். ஈரோட்டில் பணபலம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை திமுகவினர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
திமுகவை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுக தேவை. ஈரோடு தேர்தல் தமிழக பிரச்சனைகள் குறித்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் என இருவரிடமும் கலந்து பேசினோம். இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிப்போம். இருவரும் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, விலைவாசி உயர்வால் மக்களிடம் திமுக கெட்ட பெயர் எடுத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தேர்தலில் தமிழக பாஜகவின் தற்போது நிலைப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பதிலளித்த அண்ணாமலை, பிப்ரவரி 7ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் உள்ளது. அதுவரை பொறுத்திருங்கள் என்றார்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பாஜவிடமிருந்து எந்தவொரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்ற கேள்விக்கு, அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என தனித்தனியாக இல்லாமல் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.