தாராபுரம் அருகே காங்கேயம் பிரிவு அருகே மினி டெம்போ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழனிக்குச் சென்ற பாதயாத்திரை பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
திருப்பூர்: பழனிக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவருடன் அப்பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் பழனிக்குப் பாதயாத்திரையாகச் சென்று விட்டு 19ஆம் தேதி மினி டெம்போவில் எடப்பாடி செல்ல தாராபுரம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சௌந்தர்ராஜன் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.
காங்கேயத்திலிருந்து தாராபுரம் நோக்கி வந்த அரசு பேருந்து காங்கேயம் பிரிவு அருகே வந்த போது, மினி டெம்போ மீது மோதியது. இதில் சௌந்தர்ராஜன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடன் வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சௌந்தர்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.