வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்ற போது, வனத்துறையின் வாகனத்தை காட்டு யானை ஒன்று உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனச்சரக வாகனத்தை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் மானாம்பள்ளி வனச்சரகம் மற்றும் வால்பாறை வனச்சரகம் ஆகிய 2 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வன சரகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
மனிதர்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்ற இரவு பகலாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர், காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளை விரட்டுவதற்காக வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு வால்பாறை அருகேயுள்ள ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் பதினைந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் வாகனத்தின் மூலமாக காட்டு யானைகளை விரட்டினர்.
அப்போது கூட்டத்திலிருந்து வந்த ஒரு காட்டு யானை வனத்துறை வாகனத்தை வேகமாக முட்டியும், தந்தத்தால் குத்தியும் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது. இதனிடையே வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில், வனத்துறை வாகனத்தை காட்டு யானை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை அடர்ந்த வன பகுதிக்குள் விரட்ட வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.