எட்டிமடை பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கோவை: எட்டிமடை பேரூராட்சியில் அதிமுக,திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் எட்டிமடை பேரூராட்சியில் 12 கவுன்சிலர்கள் உள்ளனர். பேரூராட்சி தலைவராக கீதா உள்ளார். இந்நிலையில் வார்டு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது எட்டிமடை பேரூராட்சியில் போடப்பட்ட போர்வெல் மோட்டார் சரி செய்ய ரூ.1.5 லட்சம் என மூன்று மோட்டார்களுக்கு பணம் எடுத்துள்ளதாகவும், இதேபோல் பல்வேறு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான முறையான வரவு, செலவு கணக்குகளை காட்ட வேண்டும் எனவும் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் இம்மாதிரி போலி கணக்குகளை காட்டினால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் எனவும் எனவே முறையான கணக்குகளை காட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அதற்கு முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேரூராட்சித் தலைவர் கீதா நடந்து கொண்டதால், திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வரவு செலவு கணக்குகளை முறையாக காட்டாவிட்டால் வெளியேறப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
இதனிடையே ஒரு சில வார்டுகளில் கவுன்சிலருக்கு தெரியாமல் பல்வேறு பணிகள் நடந்து வருவதாகவும், இது குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் அளிப்பதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து ஏழு கவுன்சிலர்களும் எந்தப் பணியாக இருந்தாலும் கவுன்சிலர்களுக்கு தெரியாமல் தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கடிதம் ஒன்றை பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொடுத்தனர்.
ஆனால் பேரூராட்சி செயல் அலுவலர் அதை வாங்க மறுத்ததால் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழு கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதிய உணவையும் வரவழைத்து அலுவலகத்திலேயே உண்டபின் உரிய பதில் வராமல் இங்கிருந்து செல்லப் போவதில்லை என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.