கோவை பீளமேடு அருகே இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள், சாலையில் பேருந்துகளை நிறுத்தி தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல்.
கோவை: கோவை பீளமேடு அருகே இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள், போட்டிப் போட்டு பேருந்தை ஓட்டி வந்து சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாநகரில் இயக்கப்படும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே யார் முதலில் பேருந்தை இயக்குவது தொடர்பாக அடிக்கடி தகராறில் ஈடுபடுவதோடு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், பேருந்துகளை வேகமாக இயக்குவது போன்ற பிரச்னைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
குறிப்பாக காந்திபுரம் பேருந்து நிலையம், டவுன்ஹால், உக்கடம் பேருந்து நிறுத்தங்களில் ஓட்டுநர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை உக்கடத்திலிருந்து சிங்காநல்லூர், பீளமேடு வழியாக காந்திபுரத்திற்கு இயக்கப்படும் ஶ்ரீகுமரன் தனியார் பேருந்து மற்றும் காந்திபுரத்திலிருந்து கணுவாய் செல்லும் சப்தகிரி தனியார் பேருந்தும் அவினாசி சாலையில் வந்த போது போட்டிப் போட்டு வேகமாக இயக்கியுள்ளனர்.
அப்போது பீளமேடு அருகே வந்த போது இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் பேருந்துகளை சாலையில் நிறுத்தி விட்டு, சாலையில் இறங்கி டைமிங் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த மாநகர போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் டைமிங் பிரச்சனையால் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் பேருந்துகளை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.