குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரம் முமுழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகரம் முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடு மற்றும் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பாலகிருஷ்ணன், வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மாநகரம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், மோப்பநாய் உதவியுடன் கோவை ரயில் நிலையம், வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
முக்கிய குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 11 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அதேபோல், மாநகரம் முழுவதும் உள்ள தனியார் விடுதிகளில் வந்து தங்கும் நபர்கள் குறித்த முழுவிவரங்களை சேகரிக்குமாறு விடுதி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முழுமையான தகவல்களை பெறாமல் தங்க வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.