திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வனத்துறை அதிகாரி எனக் கூறி வாடகைக்கு வீடு எடுத்து கள்ள நோட்டு அடித்த நபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.1,78,000 ரூபாய் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் கொழுமம் பகுதியில் பிரபு (வயது39) என்பவர் வீட்டில், கேரள மாநிலம் மறையூர் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமரலிங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தமிழ்நாடு போலீசார் இது குறித்து விசாரித்தபோது, கடந்த வாரம் கேரளாவில் கள்ள நோட்டு வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகர் என்பவரை கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் மூன்று நாட்களுக்கு முன் குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் என்பவரை கேரள தனிப்படை போலீசார் கைது செய்ததும் தெரியவந்தது.
ஹக்கீம் கொடுத்த தகவலின்பேரில், கொழுமம் பகுதியில் தன்னை வனத்துறை அதிகாரி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பிரபு என்பவரை, அவரது வீட்டை வைத்து கேரளா தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1,78,000 ரூபாய் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் நோட்டு என்னும் இயந்திரம், கள்ள நோட்டு அடிப்பதற்கு பயன்படுத்திய இயந்திரம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பிரபுவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. கள்ள நோட்டு அச்சடித்த சம்பவத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடைய இன்னும் பல குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கேரளா போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஹக்கீம், பிரபு ஆகியோருடன் கேரளா போலீசார் தேனி சென்றனர்.
அரசு அதிகாரி எனக் கூறி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கள்ளநோட்டுகளை அடித்து விநியோகம் செய்ய முயன்ற சம்பவம் கொழுமம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.