திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஆர்.கே.எஸ். டிவிஎஸ் ஷோரூம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவரது தாயார் கண்ணம்மாள். இவர் ஆர்.கே.எஸ் ஷோரூம்- ல் சமையல் வேலை செய்துகொண்டு அங்கேயே தங்கியும் வருகிறார்.
இந்த நிலையில், கண்ணம்மாள், அவரது மகன் கார்த்திகேயன் மதியம் ஒரு மணி அளவில் மதிய உணவு அருந்துவதற்காக தனது இரு சக்கர வாகனத்தை ஆர்.கே.எஸ் ஷோரூம் முன்பு நிறுத்திவிட்டு உணவு அருந்த சென்றுவிட்டார்.
மாலை 4 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. மேலும், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், கார்த்திகேயனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி சென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்திருடிச் செல்லும் இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.