முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் 'படைவீரர் கொடிநாள்' இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற கொடி நாள் நன்கொடை வழங்கும் நிகழ்வை ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
கோவை: இந்திய முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி "படைவீரர் கொடி நாள்" கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறை கடந்த 1949-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளையொட்டி, நாடு முழுவதும் கொடி நாள் நன்கொடை வசூலிக்கப்படும்.
இதன் மூலம் கிடைக்கும் நிதிகள் அனைத்தும், படை வீரர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்காகவும், பணியின் போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறு வாழ்விற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி கோவையில் படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்பட்டு கொடி நாள் நன்கொடை பெறப்படுகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார்.
முன்னதாக தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நன்கொடை வழங்கியதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அங்கு வந்திருந்த பொதுமக்கள் பலரும் நன்கொடைகளை வழங்கினர்.
இந்த நன்கொடை வசூலை முன்னாள் ராணுவப் படையினர் மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.