கூடலூர் வாச்சிக்கொல்லி பகுதியில் சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையை மீட்க வனத்துறையினர் தாய் யானையை விரட்ட முயன்ற போது, ஆக்ரோஷத்துடன் துரத்திய நிலையில், கும்கி யானையை கொண்டு தாய் யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பின் குட்டி யானையின் உடலை மீட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வாச்சிகொல்லி பகுதியில் யானைகளின் பிளிறல் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அது குறித்து அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு குட்டி யானை அங்குள்ள நீர் நிலையில் இருந்த சேற்றில் சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அதன் அருகே தாய் யானை சத்தமிட்டவாறு நிற்பதை கண்ட வனத்துறையினர், தாய் யானையை விரட்ட முயன்றனர்.
அப்போது ஆக்ரோஷத்தில் இருந்த தாய் யானை வனத்துறையினரை துரத்தியது. இதையடுத்து, அங்கு கும்கி யானை வரவழைக்கப்பட்டு, தாய் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு தாய் யானை வனப்பகுதி சென்றதை தொடர்ந்து, இறந்த குட்டியின் உடலை மீட்டு முதுமலை வன கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது இறந்தது ஒரு வயது மதிக்கதக்க ஆண் குட்டி யானை என்பது தெரிய வந்தது.