அன்னம்பாளையத்தில் உள்ள மீன் பண்ணையில் 50 கிலோ எடையுள்ள 90 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார், 4.5 டன் எடை கொண்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாட்டில் இலவசமாகவும், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி கிடைக்கப் பெறுவதால், அதனை கொள்முதல் செய்யும் சட்டவிரோத கும்பல், அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று, விற்று லாபம் பார்த்து வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக குடிமை பொருள் வழங்கல் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி வாகன தணிக்கை மற்றும் சந்தேகிக்கும் படியாக உள்ள இடங்களில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, இன்று குடிமை பொருள் அதிகாரிகளின் சோதனையின் போது, கோவை அன்னம்பாளையம் பகுதியில் மீன் பண்ணையில் உள்ள ஷெட் ஒன்றில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
சோதனையில், 50 கிலோ எடையுள்ள 90 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார், 4.5 டன் எடை கொண்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது, அங்கிருந்த மாரிமுத்து என்பவரை குடிமை பொருள் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்திய போது, அவர் கேரள உள்ளிட்டு வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி விற்று வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாரிமுத்துவை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், அரிசி கடத்தலில் ஈடுபட்ட சக்தி பெருமாள், சொக்கலிங்கம், கருப்பு, துரை உள்ளிட்ட நான்கு பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.